Wednesday, July 8, 2009

ஈழம் தீர்வு பேசுவது இப்போது சரியா?


டி.அருள் எழிலன்

ஒரு ஆயுதப் போராட்டம் எத்தகையக சூழலில் அழியக்கூடாதோ அப்படி அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போரின் முடிவு துயரம் கவிந்த இருண்ட மேகத்தை தமிழ் மக்கள் மேல் இறக்கிச் சென்றிருக்கிறது. புலிகள் அழிவிலிருந்து தப்பியிருந்தால் இன்றைய சூழல் வேறு. இந்த அழிவை நான் தமிழர்கள் சந்தித்த பெரிய பினண்டைவாகவே பார்க்கிறேன். காரணம் பெரும்பான்மைச் சமூகமும் அதன் தலைமையும் தென் பிராந்தியத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் தன் சொந்த மக்களான சிங்களர்களை பலியாக்குவதோடு தமிழ் மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு போதையை ஊட்டிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் ஏதுவுமற்ற நிலையில் சூழல் நிலவும் மௌனமுமே அதன் வெற்றியையும் வெற்றிக்குப் பிந்தைய போதையையும் நீட்டித்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் அவரது குடும்பம், ஏனைய போராளிகள் குறித்த தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக வழங்குவதன் மூலம் புலத்தில் மக்களை பலவீனமாக்க நினைகிறது இலங்கை அரசு. இபப்டியான பெரும் இன்னலும் இக்கட்டும் சூழ்ந்துள்ள நிலையில் அவ்வப்போது 13-வது சட்டத்திருத்தம் குறித்து இலங்கை பேசிவருகிறது. இந்தியா தற்காலத்தில் 13-வது சட்டத்திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்று பேசாமல். பொதுவாக இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் சமமாக வாழும் படியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறது. அனைத்து சமூகத்தினரும் என்றால், சிங்களர்களும் சம உரிமை இல்லாமல் இருப்பது பொலவும், பெரும்பான்மை பௌத்த சிங்கள சமூகத்தையும் சிறுபான்மை சமூகத்தையும் சம அளவில் வைத்துப் பார்க்கிறது. இந்தியா அல்லது சில நேரங்களில் தமிழ் மக்கள் அங்கு கௌரவமாக வாழ வேண்டும் என்கிறது. ஆனால் ராஜபட்சேவுக்கு அவரின் குடிமக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும் சொல்கிறது இந்தியா.

ஆனால் இந்த 13-வது சட்டத்திருத்தம் என்கிற அங்கத நாடகம் இன்று புலிகளின் வீழ்ச்சியாலும், தமிழர் தரப்பின் கோரிக்கைகளை முன் வைக்கக் கூட ஒரு சரியான தலைமை இல்லை என்ற நிலையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் ஒரு தரப்பு பலவீனமாகி விட்டது என்பதற்காகவே பல வீனமான ஒரு தீர்வை அவர்களின் தலையில் கட்டி விடுவது என்பது முரணைத் தீர்ப்பதற்கான வழி என்றோ, நீண்ட கால நோக்கில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றோ இலங்கையில் உள்ள பேரினவாதிகள் நினைக்கவில்லை. ஜெயவர்த்தனே காலத்தில் தொடங்கி நடந்த இந்த நாட்கத்தில் இலங்கையின் சகல்க் கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டன. இந்தியாவை ஏமாற்றும் இந்த நாடகத்தின் ஒரு பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பத்தையும் மீறி சில வேளை இந்தியா நடந்திருக்கலாம். அதுதான் வடக்கு கிழக்கு இணைப்பு. ஆனால் நீதிமன்றம் மூலம் அதை வென்ற பிறகு 13-வது திருத்தத்தில் மீது இருப்பது வடக்கு கிழக்கு மக்களுக்கு நில அதிகாரமும் போலீஸ் அதிகாரமும்தான். போலீஸ் அதிகாரம் வேண்டாம் என்று கருணா,டக்ளஸ் போன்றோர்கள் சொல்லி வரும் சூழலில்,
கிளிநொச்சி வீழ்ந்ததை விட்டு சர்வக்கட்சிக் கூட்டத்திலிருந்து விலகிய அதற்காக சொன்னக் காரணம் அதிர்ச்சி அளித்தது கிளிநொச்சி வீழ்ந்த பிறகு தமிழ் மக்களுக்கு தீர்வு தேவையில்லை என்று வெளியேறியது. இடது சாரிக் கட்சி என்று சொல்லப்படும் இனவாதக் கட்சியான ஜே.வி.பியும் ஹெல உருமய போன்ற பௌத்த சிஙக்ள அடிப்படைவாதிகளும் இன்று தீர்வு தேவை இல்லை என்கிறார்கள். 13 -வது சட்டத்திருத்தம் என்கிற ஒன்றுமே இல்லாத தீர்வு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் விடிவே அதில் இருப்பது போலவும் அதை வழங்கவிடாது தடுப்பதும் கொடுத்துவிடுவேனா? என்று ராஜபட்சே நடிப்பதும் மிகப்பெறிய நாட்கங்கள். நீண்டகாலமாகவே தமிழ் மக்களை வைத்து நடைபெறும் இந்த சீட்டு விளையாட்டு புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் வலுபெற்றிருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இதில் எதிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதோடு இலங்கை என்கிற ஒரு தேசத்தில் மன வேறுப்பாட்டை முன்னிலும் அதிமான கொண்ட காலத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதும்தான் யதார்த்தமான உண்மை.

13- வது சட்டத்திருத்தத்தால் தமிழ் ம்கக்ளுக்கு கிடைத்த ஒரே ஆதாயம் இலங்கையில் தமிழர்களின் மரபு வழித்தாயகம் என்பது வடக்கு கிழக்கு என்பதாக அது உருவாக்கிய அடையாளம்தான். ஆனால் இப்போது அதுவும் இல்லை. காணி அதிகாரமும், போலீஸ் அதிகாரமும் இல்லை என்றால், 13- வது சட்டத்திருத்தத்தில் என்னதான் இருக்கிறது என்பதை இலங்கை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுவரை இந்த தீர்வு தொடர்பாக பேசுவதோ இதை நடைமுறைபடுத்தக் கோரி கெஞ்சுவதோ வீண் வேலை. சம்ஷ்டியாட்சி முறையிலான தீர்வு சாத்தியமில்லை என்பதும். மாநிலங்களல்ல மாகாண அளவிலான உரிமைகள் கூட வழங்கப்படலாகாது என்பதும்.நாம் கொடுப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று தடித்தனமாக பேசுவதும். போர் கொடுத்த வெற்றி போதையின் வார்த்தைகள். நீண்ட நாட்களுக்கு பிரபாகரனின் இழப்பை வைத்தே தமிழ் மக்களை மிரட்டி விட இயலாது என்பதை நீங்கள் உணரக்கூடும்.
இப்போது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அதிகார பலம் குறையும் வரை சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான காத்திரமான போராட்டங்களை இலங்கைக்கு வெளியே முன்னெடுக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதுபதி முறையில் உச்சபட்ச அடக்குமுறையை இலங்கை இராணுவ ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த போதை தெளியவும். உள் அழுகிக் கொண்டிருக்கும் காயங்களும். பிரபாகரன் கொடுத்த அடிகளும் தெரிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இழப்புகளை மறைத்து, அழுகி நாறிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்ய மண்டியிட்டு பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே காய்களை நகர்த்துகிறார். அவர் சவால்களை இராணுவத்தின் மூலம் எதிர்கொள்கிறார். சர்வதேச நாடுகளை அகதி முகாம்களில் நிரம்பிவழியும் மலக்கூடங்களைக் கொண்டே சரி செய்யப்பார்க்கிறார். அவர்களை பட்டினியிட்டு, முகாம்களுக்குள் அடைத்து மேற்கின் மனச்சாட்சியை உலுக்கி பணம் பறிக்கும் ஒரு பிக்பாக்கெட் காரனைப் போல ராஜபட்சே இப்போது என் கண்களுக்குத் தெரிகிறார். அது போன்ற ஒரு பிக்பாக்கெட் கருவிதான் 13-வது சட்டத் திருத்தமும்.
இதோ வடக்கு கிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கு என்று இந்தியா தன் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாயை அறிவித்தது. தமிழக மக்கள் போர் நிறுத்தம் கேட்டார்கள். இந்திய அரசோ இலங்கை அரசுக்கு மக்கள் பேரின் கோடிகளைக் கொட்டுகிறார்கள். இலங்கை அரசோடு சேர்ந்து இந்திய வெளிவிவகாரத்துறை இப்பணியைச் செய்யுமாம். வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார்? இதே சிவசங்கரமேனனும். எம்.கே நாராயணனும். கடந்த காலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். இந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்றும். எவ்விதமான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன என்று சர்வதேச அளவிலான கண்காணிப்புக் குழு ஒன்று கூட இதுவரை அமைக்கப்படைவ்ல்லை.ஆக, கண்கூடாக ஒன்று நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது வடக்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் மறுபடியும் தங்களின் பாரமப்ரீய பிரதேசங்களுக்குச் செல்வார்கள் என்ற நிலை இல்லை. அம்மக்கள் முகாம்களுக்குள் இருக்கிறவரைதான் உலக நாடுகளிடம் அவர்களைக்காட்டி இலங்கை கையேந்த முடியும்.
தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வுகளையும் கொடுக்காமல் அவர்களை அரசியல் ரீதியாகவும் வதிவிட ரீதியாகவும் சிதறிடித்து தனிமைபடுத்துவதிலேயே பெரும்பான்மை சமூகத்தின் வெற்றி இருக்கிறது என்னும் சூழலில் 13-வது சட்டத்திருத்தன் கீழ் தீர்வைத் தேடுவது போல தேடிக் கொண்டே இருப்பதுதான் இதுதான் இலங்கையில் நிலை. இதை இந்தியாவும் ஆதரிக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இன்றைய சூழலில் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது சரியா?

பொதுவாக அரசியல் தீர்வு குறித்துப் பேசுவோர் இலங்கையில் போர் முடிந்து விட்டது என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். துயரமான இனப்படுகொலை ஒன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு புலிகளின் தலைமை வஞ்சகமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் நூற்றுக் கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ போராளிகள் இலங்கையில் பல் வேறு பகுதிகளிலும் சிறு சிறு குழுக்களாக இருப்பதும் தெரியவருகிறது. புலிகளின் கடைசி நேர முடிவான ஆயுதங்களை மௌனித்திருக்கச் செய்வது என்கிற முடிவின் படியே அவர்கள் தாக்குதல் எதையும் தொடுக்காத அரசியல் முடிவை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புலிகளின் ஆயுதப் போராட்டம் அதன் வலிமையை முற்றாக இழ்ந்துள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என்கிற இலங்கை அரசின் பிரச்சாரம் என்பது பொய் பிரச்சாரமே. இம்மாதிரி ஒரு சூழலில்,
தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் சிலர் போருக்குப் பிந்தைய அரசியல் தீர்வு குறீத்துப் பேசுகிறார்கள். கிழக்கின் குரல் அதிகமாக இம்மாதிரி கூட்டங்களில் ஒலிக்கும் நிலையில் வடக்கு மக்களுக்கான அரசியல் கருத்துக்களை எடுத்து வைக்க ஆளில்லாத சூழலில் இம்மாதிரியான கருத்துக்களும் தீர்வுகள் குறித்தும் பேசபப்டுகிறது. எந்த மக்களுக்காக இவர்கள் தீர்வு சொல்கிறோம் என்று பேசுகிறார்களோ அந்த மக்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இல்லை அவர்கள் தடுத்து வதை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு திரும்பாதவரை இங்கிருந்து கொண்டு தீர்வு குறித்துப் பேசுவதென்பது அபத்தமான ஒன்றாகவேப் படுகிறது. இலங்கை அரசின் ஆதரவோடு இந்தியவுக்கான இலங்கைத் தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே , துணைத்தூதர் அம்சா, இந்து ஆசிரியர் ராம், போன்றோர் கலந்து கொள்ளும் கூட்டங்களும் இவைகளுள் ஒன்று. இந்து பரிவாரங்களின் ஒரு பிரதான அமைப்பான ஆர்.எஸ். எஸ் அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆப்சர்வர் இதழும் அவர்களின் சென்னையை மையமிட்டு நடத்தப்படும் அமைப்பான "அப்சர்வர் ரிசார்ச் பவுண்டேசன்" அமைப்பும் இவர்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசின் குரலை ஒலிப்பது சமீபத்தில் சென்னையில் ரகசியமாக நடந்து வருகிறது. இம்மாதிரி கூட்டங்களுக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்பதோடு ரகசியமாகவே அழைப்பிதழும் விநியோகிக்கப்படுகிறது.
இன்னும் சிலரோ ஈழம் என்கிற கருத்தையே நிராகரிக்கிற போக்கைக் கொண்டிருக்கின்றனர்.புலிகளுடன் முரண்பட்ட இஸ்லாமிய மக்களின் குரலை பிரதானமாக வைத்து முன்னெடுக்கப்படும் இம்மாதிரி கூட்டங்களில் தமிழர் தரப்பு உரிமைகளோ கோரிக்கைகளோ வெளிப்படுத்தப்படுவதில்லை. இப்போக்கு மேலும் மேலும் சிறுபான்மை சமுகங்களிடையே பிளவை உருவாக்குவதோடு மீண்டும் ஒரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் ஏனென்றால் , கிழ்ககில் இஸ்லாமியர்களும் வடக்கின் தமிழ் மக்களையும் மோத விடுவதற்கான ஒரு சூழலை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கான சூழலை இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளும் அப்சர்வர் போன்ற அமைப்புகளும் செய்யத் துவங்கியுள்ளது.
எந்த மக்களுக்காக நாம் தீர்வு குறித்துப் பேச முனைகிறோமோ அவர்கள் இன்று சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு இனமாக இருக்கும் போது அவர்களின் குரல் நெறிக்கப்பட்டிருக்கும் சூழலில் தீர்வு குறீத்துப் பேசுவதே இன்னொரு வன்முறைதான். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளார்கள் தண்டிக்கப்பட்டாலும் மட்டுமே அம்மக்கள் நம்மீது நம்பிக்கை கொள்வார்கள்.


மற்றபடி,
ராஜபட்சேயின் ஆட்சியில் கொடுமையை உணரும் நிலையில் சில சிங்களக் கட்சிகள் வந்திருப்பதும் தெரிகிறது. மீண்டும் சொல்வதென்றால் சிங்கள ஆட்சியாளர்களின் பல குறையாமல் தீர்வு சாத்தியமில்லை. இராணுவ ரீதியாக தமிழ் மக்களை வென்று அரசியல் ரீதியாக சிங்களர்கள் எழுச்சி பெற்றி ஒரு மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்வது போன்ற ஒரு மயக்கத்தைக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் மக்களின் வேதனைகளும் விம்மல்களும் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மக்களை முகாம்களில் இருந்து அவ்ர்களின் இடங்களுக்கு அனுப்பு....நிவாரணம் என்ற பெயரில் நிலத்தை மக்களிடம் இருந்து பிடுங்காதே, என்கிற குரல்களை உயர்த்துவதோடு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்கு எதிராக போராட முன்வரவேண்டும் . இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுப்பப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம். அது வரை ஒரு யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது. இலங்கையில் இனி சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை.





Tuesday, July 7, 2009

முகாம்களின் கதை...



டி.அருள் எழிலன்.

அன்பின் அப்பா தங்கை அறிவது,
இங்கு நலமே, உங்கள் நலம் எப்படி? அம்மாவை வவுனியா வைத்தியசாலையில் போய் பார்த்தீர்களா? இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கிறது. சாப்பாடு லயனில் நின்று வாங்க வேண்டும். சில வேளை முடிந்து விடும் தீர்ந்தால் கிடைக்காது. குக்கருக்கு மண்ணெண்ணெய் இல்லை பிள்ளைக்கு மா போத்தல் இல்லை குழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை, விளக்கு எடுக்க எண்ணெய் ஏதும் இல்லை ஆறேனும் வந்தால் குழந்தைக்கு மா போத்தல் கொடுத்து அனுப்பவும். செல்லடிக்கு பயந்துதான் இங்க வந்தோம் வந்தவங்களில் பாதி பேரை இங்கேயும் காணவில்லை. அப்பா எங்களை வெளியே எடுக்க முடியுமா? மறக்காமல் குழந்தைக்கு மா போத்தல் கொடுத்து அனுப்பவும். தங்கையை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
இப்படிக்கு அன்பு மகள்
சாந்தினி
மனிக் முகாம்.


பெற்றவள் குற்றுயிரும் குலையிறுமாக மருத்துவமனையில் கிடக்கிறாள். தகப்பனும் தங்கையும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் முள்ளியவாய்க்காலுக்கு முகாமிலிருந்து மகள் எழுதிய கடிதம் இது. ஆனால் இந்தக் கடிதம் தகப்பனுக்குச் போய்ச் சேர்ந்ததா? அல்லது இறுதிக் கட்டப் போரில் சாந்தினியின் தங்கையும் தகப்பனும் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு வழியாக போரில் வன்னியை வென்று புலிகளை தோற்கடித்து விட்டதாகச் சொல்லி பெரும் வெற்றிக் களியாட்டங்களில் ஈடுபட்டிக்கிறது சிங்களப் பேரினவாதம். ஆனால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் முடமாக்கப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, யாழ்பாணம், என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அலுமினியத் தகரங்களால் வேயப்பட்டு சுற்றிவர கம்பி வேலிகளால் தடுக்கப்பட்டுள்ள முகாம்களை இலங்கை அரசு கண்காணிப்பு இல்லங்கள் என்கிறது அல்லது நலன்புரி நிலையங்கள் என்கிறது. ஆனால் அன்றாடம் ரத்தம் சொட்டச் சொட்ட தமிழ் மக்கள் வடிக்கிற கண்ணீர் கதைகளோ அதை தமிழர்களுக்காக இலங்கை அரசு உருவாக்கிய வதைமுகாம் என்கிறது.
ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும்,11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொல்லுகிற இலங்கை அரசு இதுவரை முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை. முழுக்க முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாம்களில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேர் இருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை எந்த பதிலையும் சொல்ல வில்லை. 14 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்த வன்னித் தமிழனும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சுழுல் அங்கே நிலவுவதாக சர்வதேச பணியாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இவளவு பெரிய மனிதப் படுகொலையை செய்த இலங்கையை தட்டிக்கேட்கவோ மனித நெறி உறைக்கவோ ஒருவரும் இல்லை என்பது தெரிந்ததும் கேட்பார் கேள்வி இல்லாமல் நாள் தோறும் மனிதப் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முகாம்களுக்குள், போரும் செல்லடியும் முள்ளியவாய்க்காலோடு முடிந்து போனது என்று நினைத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களுக்கு இப்போது உயிர்வாழ்வதே பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது.


வன்னி மக்களுக்காக இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் முகாம்களிலேயே ஆகப் பெரியது வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மானிக் முகாம்தான். இங்கு மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் போதிய உணவில்லாமல் ஊட்டச்சத்திலாமல் மரணத்தை எதிர் நோக்குகிறார்கள். கடந்த பல மாதங்களாக கடுமையான போருக்குள் வாழ்ந்த சிறுவர்களும் குழந்தைகளும் கடுமையான உளவியல் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதற்கு எதுவிதமான சிகிட்சைகளும் இல்லாத சூழலில் அவர்களுக்கு போதிய உணவும் இல்லை. நாளொன்றுக்கு பத்திலிருந்து பதினைந்து முதியவர்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இறந்து போகிறார்கள். அந்த உடல்கள் அங்கேயே அடக்கம் செய்யப்படுகின்றன. முகாமுக்குள் அபலைகளாக திரியும் பலரையும் பார்க்கும் போது வன்னி மக்கள் ஒரு பெருந்தொகையானோர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.


இதோ மானிக்முகாமுக்கு சென்று வந்தவர் சொல்கிறார் இப்படி,
‘‘நான் கொழும்பில் இருந்து மானிக்முகாமுக்கு என் சொந்தங்களைக் காணச் சென்றேன். அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனது சகோதரரை பார்க்க இன்னொரு முகாமுக்குச் சென்றேன் அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிஸார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிஸார் உங்களை அவதானித்துக் கொண்டே இருப்பர். நான் எனது சகோதரரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவர் கண்கலங்கி தேம்பியபடி இருந்தார். கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றோம் என்பதை எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணை வீச்சுக்காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக் கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இப்போது அவர்களுக்கு சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஓவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கி.மீமாவும் 300 கிராம் சீனியும் கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.’’ என்று தன் சகோதர்களின் கதை சொல்கிறார் தப்பிப் பிழைத்த ஒரு மனிதர்.


ஆண்களாவது பரவாயில்லை ஒரு கொட்டகைக்குள் இரண்டு குடும்பங்களை இராணுவம் குடியமர்த்தியிருக்கிறது. எந்த நேரத்திலும் அறைக்குள் நுழையவோ யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லவோ கட்டற்ற சுதந்திரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சிறுமிகள், இளம்பெண்களை அவர்கள் குறிவைக்கிறார்கள். மறுக்கிறவர்களுக்கு திரும்பிவர முடியாத பயணம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. ஆமால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.அல்லது வெறி பிடித்த ஒரு இராணுவ சிப்பாயின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறார்கள்.





பழங்குடிகள்...... சாம்பல் மூடிய நெருப்பு


டி.அருள் எழிலன்
பழங்குடிகள்...... சாம்பல் மூடிய நெருப்பு
"இந்தியாவின் இனவெறிக்கு நானே சாட்சி, வடகிழக்கில் இருந்து ஒருவர் தென் இந்தியாவுக்குச் சென்றால் அவரை நேபாளியா? என்று கேட்கிறார்கள். டில்லியிலோ வடகிழக்கு என்றொரு பகுதி இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் அதிகார பீடங்களில் இருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்," இது இரண்டு நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தண்ணீர் குறீத்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட மிசோராம் மாநில முதல்வர் லால் தான்வாலா (ஷிலீக்ஷீவீ லிணீறீ ஜிலீணீஸீலீணீஷ்றீணீ) கூறிய வார்த்தைகள். அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுதான் முதல்வராகியிருக்கிறார். காங்கிரஸ் அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது. வாலாவின் இந்தப் பேச்சு தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது வடகிழக்கில் கொஞ்சம் கொஞ்மாக இந்தியா செல்வாக்கிழந்து கொண்டிருக்கிறது. போலீஸ் ராணுவ அடக்குமுறை, சட்டவிரோத குழுக்கள் என அங்குள்ள பழங்குடி மக்களை அச்சுறுத்தி அமைதியை நிலைநாட்டுக் கொண்டிருக்கிறது இந்திய இராணுவம். ஆனால் வடகிழக்கின் கொதிப்புதான் மேற்குவங்கத்தில் பழங்குடிகள் மாவோயிஸ்ட் கூட்டாக வெடிக்கிறது. போலீசாலோ சட்டத்தாலோ நீங்கள் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்கள்.ஆனால் அம்மக்களின் பெரும்பங்கு
நிலங்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு எஸ்டேட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்களின் பூர்வீக நிலங்களை பிடுங்கி தேயிலையும் காபியும் பயிர்செய்து நீண்டகாலமாக அவர்களை அவர்களது மண்ணிலேயே கூலிகளாக்கி முதலாளிகளாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நிலங்களை பங்கிடுங்கள். உள்ளூரில் வேலைவாய்ப்பையும் கிராமங்களுக்கு அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுக்கும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. உலக மயமாக்கலின் முக்கிய சந்தையாக இந்தியா மாறிய பிறகு இந்தியாவின் பெருநகரங்களும் அதன் கட்டிடங்களும் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் அதே நகர்ப்புரங்களில் மத்திய தர வர்க்கமும் உதிரிகளும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஏழைகளும் வாழும் நகரமாக இருந்த சென்னை இன்று பணக்காரர்களுக்கே உரிய ஒரு நகரமாக மட்டுமே மாறிவிட்டது. குடிசைகள் கொழுத்தப்பட்டு அவர்கள் சென்னைக்கு வெளியே குடியமர்த்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் வாழ்ந்த இடங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.ஒன்றிலோ அவர்கள் வீடற்றவர்கள் ஆனார்கள். அல்லது நகரங்களுக்கு வெளியே உருவான புதிய சேரிகளுக்கு படையெடுத்தார்கள். இந்தியாவின் முரண்பாடும் அது சந்திக்கும் இடர்பாடுகளும் இருகி வருவதற்கு இது ஒரு பிரதான காரணம்.ஆனால் தொழில் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் என்ற கோஷத்தில் இந்த ஏழைகளில் குரல் எடுபடாமல் போகிறது.

வடகிழக்கின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரே நேரத்தில் மேற்குவங்கத்திலும் காஷ்மீரிலும் இராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்தியிருக்கிறது இந்தியா. ஐந்து துணை ராணுவக் குழுக்களை அனுப்பி லால்கர் & ன் ஐம்பது கிராமங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தால் பழங்குடிகளின் மனதை வெல்ல முடியவில்லை. இது சிக்கலான பிரச்சனை. மேற்கு வங்கத்தில் ஆளுவது மார்க்சிஸ்டுகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்ஸ்சிஸ்டுகளின் கோட்டையில் மம்தா தொகுதிகளைக் கைப்பற்றி மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்துகிறார். மார்க்ஸ்சிஸ்டுகளோ அணு சக்தி ஒப்பந்தத்தில் காங்கிரஸோடு முரண்பட்டு வெளியில் வந்து மூன்றாவது அணி அமைத்து தோல்வி கண்டவர்கள். காங்கிரசுக்கோ கூட்டணி தயவு இப்போது தேவையில்லை. இந்நிலையில்தான் மாவோயிஸ்டுகள் பழங்குடிகளின் துணையோடு லால்கர்க்கை கைப்பற்றினார்கள். மம்தா தேர்தலில் போது மாவோயிஸ்டுகளோடு ரகசிய கூட்டு வைத்திருந்தார். மாவோயிஸ்ட்கள் கைப்பற்றிய லால்கர்க்கில் மார்க்ஸ்சிஸ்டுகள் தனித்து விடப்பட்டனர். அவர்களின் அலுவலகம் உட்பட தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு சிலர் கொல்லபப்ட்டனர். கடந்த முப்பதைந்து ஆண்டுகளாக மார்க்ஸ்சிஸ்டுகள் எங்களுக்கு எதைச் செய்தார்களோ அவர்களுக்கு நாங்கள் அதையே திருப்பிச் செய்கிறோம் என்றார்கள் மாவோயிஸ்டுகள். மாவோயிஸ்டுகள் மட்டுமே இதில் தெளிவாக இருந்தார்கள். இந்திய தேர்தல் அமைப்பை ஏற்றுக் கொண்டு இந்த நிரல் மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிற மார்க்கிஸ்டுகள் லால்கரில் தோல்வி அடைந்தார்கள். மம்தாவுக்கோ மாவோயிஸ்டை ஆதரிப்பதா? காங்கிரஸை ஆதரிப்பதா? என்கிற குழப்பமான நிலையில் அங்கு இராணுவம் மக்களிடம் அத்து மீறி நடந்து கொள்கிறது. உடனடியாக படைகளை அங்கிருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நெருகக்டி கொடுத்தார்.‘மாவோயிஸ்டுகள் பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுகி அவர்களை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிற இராணுவ போலீஸ் நடவடிக்கையால் பலன் இல்லை என்று சொன்ன மேற்குவங்க முதலவர் கடைசியில் மத்திய அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்து மாவோயிஸ்டுகளைத் தடைச் செய்தார். இந்திய அரசு மாவோயிஸ்டுகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை கொண்டு வந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாகவே லால்கர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாம். ஆனால் தேர்தல் நேரத்தில் மீட்கும் நடவடிக்கையை எடுத்தால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தேர்தலுக்குப் பிறகு லாக்கர் மீட்பை இராணுவ, போலீஸ் கூட்டு நடவடிக்கையாக எடுத்திருக்கிறார்கள். உண்மையில் மேற்குவங்க எல்லையோர பகுதியாக லால்கர் மக்கள் என்ன கோரினார்கள். அவர்களுக்கு முறையான கல்வியோ, வேலைவாய்ப்போ, சிவில் உரிமைகளோ எதுவுமே கிடையாது. அவர்களின் பூர்வீக பகுதிகளை ஆக்ரமிக்கும் பெரு முதலாளிகளிடம் இருந்து நிலங்களைக் காப்பாற்றி எங்களுக்கு பங்கிட்டுக் கொடுங்கள் நாங்கள் அதில் விவசாயம் செய்கிறோம் என்றார்கள். நிலப் பங்கீடும், உழைப்புக்கான உத்திரவாதமும் கல்வியும் அவர்களின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது. ஆனால் மத்திய அரசு அவர்களுக்கு அரிசியும் காய்கரிகளும் அனுப்பி இருக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறார்கள் டில்லிக்காரர்கள். மார்க்ஸ்சிஸ்டுகளோ கடந்த முப்பதைந்து ஆண்டுகால ஆட்சியில் மேற்குவங்கத்தில் தோல்வியைத் தழுவினார்கள். அந்தத் தோல்வியின் துவக்கம்தான் நந்திக்கிராம். இப்போது லால்கர். ஆதிவாசிகளின் பிரச்சனை இந்திய மலையோர மாநிலங்கள் அனைத்திலும் உள்ளதுதான். கேரளாவின் முத்தங்காவில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும் இன்னமும் வட கேரளத்தின் ஆதிவாசிகள் பிரச்சனை அங்கே தீர்க்கப்பட வில்லை. தமிழகத்திலும் வரண்ட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை அண்டிய மாவட்டங்களில் பழங்குடிகளின் பிரச்சனை கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

பெருதொகையான மக்கள் நீண்டகால கிளர்சியை தங்களின் கோரிக்கைகளுக்காக நடத்தினார்கள். உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் இரும்புக்கதவுகள் இந்த ஏழை மக்களுக்காக திறக்கவே இல்லை.போபால் விஷவாய்வுக் கசிவின் கொலைகளுக்காக, நர்மதா பசமோன் திட்டத்தில் வாழ்விழ்ந்த விவாசாயிகளுக்காக, குடிசைப் பகுதி மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்காக என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். அந்த குரல்கள் கண்டு கொள்ளப்பட வில்லை. கொதிப்புகளையும் எழுச்சி பெற்ற போராட்டங்களை போலீஸ் நடவடிக்கையால் ஒடுக்கியது ஜனநாயகம். விளைவு அதிருப்தியுற்ற அவர்கள் தங்களுக்கு விடிவு தருவார்கள் என்று நம்பி மாவோயிஸ்டுகளுடனோ, தேசீய இனக்குழுக்களுடனோ, அடிப்படைவாதக் குழுக்களுடனோ, இணைந்து கொள்கிறார்கள். ஆனால் மாவோயிஸ்டுகள் ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தின் தோல்வியில் இருந்து பாடம் கற்றிருக்கிறார்கள். அவர்கள் கெரில்லா போர்த் தந்திரங்களைக் காட்டிலும் அரசியல் தந்திரங்களையே கைக் கொள்கிறார்கள். ஈழப் போரின் முடிவுகளுக்குப் பிறகு அதே பாணியிலான இராணுவ நடவடிக்கையையே இந்தியா கைக்கொள்கிறது. லால்கர் மக்கள் இப்போது முகாம்களின் இருக்கிறார்கள். இலங்கை அளவுக்கு இனவதை முகாம்களோ முட்கம்பி முகாம்களோ அல்ல ஆனாலும் அவர்கள் முகாம்களில் இருக்கிறார்கள் அவர்களுக்கு அரிசியும் காய்கரியும் வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் மாவோயிஸ்டுகள் வேட்டையாடப்படுகிறார்கள். இம்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து யாரும் பேசவில்லை. இந்தளவில் மாவோயிஸ்டுகளை துரத்தி விட்டு அவர்களுக்கு அரிசியும் பருப்பும் போட்டு பிரச்சனையை சமாளித்து விடலாம் என நினைக்கிறது இந்திய உள்துறை.

காஷ்மீர்

நீண்டகாலமாகவே எரிந்து கொண்டிருக்கிறது காஷ்மீர். இந்தியாவினுடையதோ பாகிஸ்தானுடையதோ அல்லாமல் தனியாட்சிப் பகுதியாக இருந்த காஷ்மீர் நேருவின் வாக்குறுதிகளின் அடிப்படையில் தனித்துவமான சில உரிமைகளோடு இந்தியாவில் இணைந்திருக்கச் சம்மதித்தது. அப்போதைய காஷ்மீர் மன்னன் அரிசிங் இந்து மன்னன், பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் அரிசிங்கை ஏற்றுக் கொண்டிருந்தனர். அரிச்ங்கோ பாகிஸ்தானிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள இந்தியாவின் உதவியை நாட இந்தியா காஷ்மீரை சுவீகரித்தது இப்படித்தான். ஆனால் சுயமான பிரதேசனாக இந்தியாவின் அனுசரணையோடு காஷ்மீர் இருக்க வேண்டும் என்பதுதான் அரிசிங்கின் ஆசை. அரிசிங்கை திருப்திப்படுத்தி காஷ்மீரை இந்தியாவுக்குள் இழுத்த இந்தியா கீழ் கண்ட உறுதிகளை காஷ்மீருக்குக் கொடுத்தது.

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவோடு இணைந்துவிட்டது. இந்தியாவுக்கென்று, "இந்திய அரசமைப்புச் சட்டம்' 1946 - 1949இல் உருவாக்கப்பட்டது. காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதி. அதே நேரத்தில் "ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்' என ஒன்று வரையப்பட இந்தியா ஒத்துக்கொண்டது. ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம், அங்கே செயல்பட்ட அரசமைப்பு அவையில், 17.11.1956இல் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

The Constitution of Jammu and KashmirPreamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves –... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... ... ... ... ...IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
1. இது என்ன கூறுகிறது?

ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் "இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் "இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.
2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

தேசியக் கொடி

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3:2
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக் கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து)
காஷ்மீர் மக்களிடம் நடத்தபப்ட வேண்டிய வாக்கெடுப்பை இன்று வரை இந்தியா நடத்தவில்லை. ஒரு பக்கம் பாகிஸ்தான் இராணுவத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள். இன்னொரு பக்கம் இந்திய இராணுவத்தின் கடும் ஒடுக்குமுறைகள். முன்னாள் போராளிகள் இயக்கங்களை விட்டு விலகியவர்கள். வறுமைக்கு பலியாகி வாழ்விழந்தவர்கள் இன்றூ காஷ்மீரில் அதிகம் அவர்களைக் கொண்டே உளவு வேலைகளைச் செய்கிறது இந்தியா. மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டு வரும் பகுதியில் காஷ்மீரும் ஒன்று.
ஜூன் முதல் வாரத்தில் இந்திய இராணுவத்தால் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறை செய்து கொல்லப்படுகிறார்கள். அமர்நாத் பனிலிங்க கோவிலுக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு ஜூன் மாதம் முழுக்க காஷ்மீர் இயல்பு நிலையில் இல்லை. பொதுமக்கள் மிகப்பெரும் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உட்பட சில அமைப்புகள் இந்த போராட்டங்களை ஒழுங்கு செய்கின்றன. ஆனால் காஷ்மீருக்குப் போன சிதம்பரம் " காஷ்மீரில் இராணுவ நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரானதுதானே தவிற பொது மக்களுக்கு எதிரானது அல்ல" என்றார். அப்படியானால் கொல்லப்பட்ட இரு பெண்களும் பயங்கரவாதிகள் என்று மறைமுகமாக சொல்வதாக பொருளாகிறது. அங்கும் நாளுக்கு நாள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வரும் ஆண்டுகளில் உலகின் ஆசிய, ஆப்ரிக்க பிராந்தியத்தின் பெரும்பங்கு மக்கள் முகாம்களுக்குள் மட்டுமே வாழ நிர்பந்திக்கப் படுவார்களோ என்று அச்சப்படும் அளவுக்கு பதட்டம் அதிகரிக்கிறது. காஷ்மீரின் மனித உரிமைக் குரல், இந்த்ய இராணுவ அத்துமீற்ல்களுக்கு எதிரான குரல் எல்லாமே காஷ்மீரிகளின் தன்னாட்சிக் கோரிக்கையோடு தொடர்புள்ளது. ஆனால் காஷ்மீரிகளின் பிரச்சனை இத்தனை காலமும் பாகிஸ்தானும் இந்தியாவும் இராணுவ ரீதியாக அணுகி வந்தது போக இப்போது இந்து , முஸ்லீம் மோதலாக மாற்றும் முயர்ச்சியும் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர், மேற்குவங்கம், வடகிழக்கு எல்லாப் பகுதிகளிலும் இராணுவ நடவடிக்கைக்கு மாடலாக முன்வைப்பது ஈழத்தைத்தான். புலிகள் மாதிரியான வலுவான ஆயுதக் குழு ஒன்று இவ்விடங்களில் போராடும் என்றால் பெரும் மக்கள் இழப்புகளை நாம் கண்டிருக்கக் கூடும். இவ்விடங்களில் போராட்டம் என்பது கொதித்து எழும் மக்கள் போராட்டமாகவே இருப்பதால் ஈழத்தின் மாடலில் இருந்து முகாம்களுக்குள் முடக்குதல் என்கிற வடிவத்தை மட்டும் எடுத்து செயல்படுத்துவதாகத் தெரிகிறது. மற்றபடி மனித உரிமை மீற்ல்களோ, கொலைகளோ எங்கும் கேள்விகளற்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் சாத்வீகப் போராட்டங்கள் படு தோல்வியில் முடிவதை நாம் காண்கிறோம். ஈழத்துக்கான தமிழக கிளர்ச்சியை மாநில அரசு ஒடுக்கிய விதங்கள் குறித்தும் போராட்ட வழிமுறைகள் குறித்தும் இன்று தமிழகத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது. மணிப்பூரில் ஜெரோம் ஷர்மிளா ஷானு சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லி ஐந்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளில் ஜெரோமின் உண்ணாவிரதம் எந்த இந்திய மனச்சாட்சியை உலுக்கியிருக்கிறது.காஷ்மீர், மணிப்பூர், உள்ளிட்ட வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களின் முரண்கள் என இந்தியா எதிர் நோக்கியுள்ள சவால்கள் நாளை இந்தியாவை சிதறடித்து விடும் தன்மை கொண்டவை. நீண்டகாலமாக தமிழகத்தின் சுயாட்சிக் கோரிக்கையை நோக்கி விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இதுதான். மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படு பழங்குடிகளின் பிரச்சனையை பிரத்தியேகமாக அணுகாமல் அடக்குமுறையால் இவைகளை சரிக்கட்டலாம் என்று நினைத்தால் இந்தியாவின் பின்னடைவு இங்கிருந்தே துவங்கும் என நினைக்கிறேன் ஏனென்றால் நாடு முழுக்க புகைந்து கொண்டிருக்கிற சாம்பலுக்குள் இருப்பது தணலான ஒரு நெருப்பு.









தமிழகத்தில் ஈழ அகதிகள் நிர்கதியாய் விடப்பட்ட இன்னொரு கூட்டம்





டி.அருள் எழிலன்



போர் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் முகாம்களுக்கு உள்ளும் வெளியிலுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகளை நாட்டுக்கு திரும்பி அனுப்பும் முடிவை இந்தியா உறுதியாக எடுத்திருப்பதாகத் தெரிகிறது. மாநில அரசு இது தொடர்பாக எந்த கொள்கை முடிவுகளும் எடுக்காத சூழலில் மாநில போலீசார் தமிழகம் முழுக்க உள்ள முகாம்களில் உள்ள அகதிகளிடம் நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம் என்ற உத்திரவாதத்தை பெற முயர்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது. எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் சிங்களர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சகோதர நாடு என நம்பி தமிழகத்துக்கு வந்தனர். அன்றைய சூழலில் ஈழ அகதிகளுக்கு தமிழ் சமூகத்தில் பெரும் வரவேற்பும் மரியாதையும் நடந்தது. இடைப்பட்ட காலங்களில் நடந்த கசப்பான உணர்வுகளை பயன்படுத்திய சில சுயநலமிகள் பாதிகக்ப்பட்டு வந்த அகதி மக்களுக்கும் உள்ளூர் தமிழ் மக்களுக்குமான மன முரணை உருவாக்கினார்கள். ஆனாலும் இன்று வரை பெரும்பாலான தமிழக மக்கள் ஈழ அகதிகள் திருப்பி அனுப்பப் படக்கூடாது என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். எண்பதுகளின் தொடங்கி இன்று வரை சுமார் (கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள் ) சுமார் முகாமுக்குள்ளும் வெளியிலுமாக இரண்டு லட்சம் அகதிக் குடும்பங்கள் வாழ்வதாக தெரிகிறது. இவர்களை எப்படியாவது தமிழகத்தை விட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது.





அதிகளவான அகதிகள் தமிழகத்துக்கு வருவதை தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல என்று பார்க்கும் இந்திய வெளிவிகாரத்துறை அவர்களை மூட்டை கட்டி இலங்கையில் கொண்டு கொட்டுவதையே விரும்புகிறது. பொன்னான வாழ்வோ, ஒளிமயமான எதிர்காலமோ தமிழகத்தில் இல்லாவிட்டாலும் கூட ஒரு விதமான பாதுகாப்பும் குடும்பத்தோடு அரைவயிற்றுக் கஞ்சியோடு வாழும் வாழும் இவர்களுக்கு கிடைத்திருந்தது. புலிகள் ஊடுறுவல், இலங்கையில் போர் தீவீரமடைதல், என்ற சுழல் எழும் போதெல்லாம் மாநில போலீசாரால் இந்த அகதிகள் கடும் கண்காணிப்புக்கு ஆழாகிறார்கள். தவிறவும் ஈழ அகதிகளை மிகவும் ஏளனமாக பார்க்கும் பொதுப்புத்தியும் இந்த காலத்தில் வளர்ந்திருக்கிறது. எப்படி மலையக மக்கள் ஏனைய உயர்வர்க்கத்தினரால் கீழானவர்களாக பார்க்கப்பட்டார்களோ அது போல இங்கே அகதிகள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற நிலை இருந்தது. அவர்களின் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருந்தது, எல்லாக் குழந்தைகளையும் போல அகதிகளின் குழந்தைகள் படிக்க முடியாத சுழுலும் இருந்தது. இந்த நிலைகள் இன்று பெரும் மாற்றம் கண்டிருக்கிறது. நடந்து முடிந்துள்ள போர் தமிழக மக்களை இவர்கள் மீது கரிசன் கொள்ளத் தூண்டியிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் அவர்கள் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.


திருப்பி அனுப்புவது நியாயமா?
அரசு நிர்வாகமும் போலீசும் ஈழத்திலிருந்து வருகிற அனைவரையுமே புலிகளாக பார்ப்பதும். அவர்களை கடும் விசாரணைக்குட்படுத்துவதும் நடக்கிறது முதியவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை திடகாத்திரமான உடல்கட்டோடு உடலில் காயங்களோ தழும்புகளோ இருந்தால் அவளவுதான் அவர் பெண்ணாக இருந்தாலும் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்படுவார். இந்த முகாம் ஒரு வகையான சித்திரவதை முகாம்களே. இவ்வகை முகாம்கள் நாடு கடந்த போராளிகளுக்கு வழங்கப்படுவதே சர்வதேச மனித அறத்திற்கு எதிரானது. இது மட்டுமலலமல் முகாம்களில் வாழ்வோர் மீதான் சீண்டல்கள், திருட்டுப்பட்டம், போலீஸ் வழக்கு, என்று அவர்கள் சந்திக்கிற கொடுமைகள் அதிகம். இந்நிலையில் இது போன்ற திருப்பி அனுப்பும் முயர்ச்சி 1992-ல் ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட போது ராமதாசும், நெடுமாறனும் நீதிமன்றத்திற்குப் போய் தடையாணை பெற்றார்கள். தவிறவும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயர்ச்சி அப்போது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது போர் முடிந்து விட்டதாகவும் ஆங்கு சுமூகச் சூழல் நிலவுவதாகவும் இலங்கையின் குரலையே இந்தியாவும் பிரதிபலிக்கிறது. அதையே தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீது திணிக்கவும் பார்க்கிறது.
போரின் பாதிப்பும் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்ட மக்களின் கதைகளையும். ஊர் ஊராய் ஓடி செத்து மடிந்த கதைகளும் அவர்களுக்கு அன்றாடம் வந்து சேர்கின்ரன. அவர்கள் தங்களின் உற்வுகளின் நிலை குறித்து கலங்கிப் போய் இருக்கின்றனர். சிலரோ சொந்தங்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அழுது புமபுகிறார்கள். பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் தெரியாமல் பாதிகக்ப்பட்டிருக்கிறார்கள். முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் மக்களையும் வேதனையோடும் அச்சத்தோடும் பார்க்கிறார்கள். நாம் திரும்பிச் சென்றாலும் இதுதான் கதியோ என்று பீதியடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் கடந்த முப்பதாண்டுகளில் இவளவு மோசமான அச்ச உணர்வுக்கும் பெருந்துன்பத்திற்கும் ஆட்பட்டதில்லை. அங்குள்ள உறவுகளே வாழ்விழந்து நிர்கதியாய் நிற்கும் போது தாங்கள் திரும்பிச் செல்வதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது நிலையில் உள்ளனர். இப்படியான நிலையில் உள்ள மக்களிடம் திரும்பி வரமாட்டோம் என்று கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவது கொலைக்களத்திற்கு இரண்டு லட்சம் மக்களை இந்தியாவே அனுப்பி வைப்பது போன்றதுதான் என்கிற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.
ஏன் இந்த பாரபட்சம் ?
1950-ல் திபெத் சீன அரசால் ஆக்ரமிக்கப்பட்ட போது பெருமளவிலான திபெத்திய அகதிகளை இந்தியா வலிந்து வரவேற்று உபசரித்தது. எண்பதுகளில் ஈழ அகதிகளையும் இப்படித்தான் வரவேற்றது. திபெத்திய அகதிகளுக்கு வளமான இடங்களை தெரிவி செய்து அவர்களை சுயமாக இராணுவக் கட்டுப்பாடில்லாமல் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழ அனுமதித்தது. பசுமையான வடகிழக்கு மாநிலங்களில் திபெத்தியர்கள் வாழ்கிறார்கள். இமாச்சல் பிரதேசத்தில் திபெத்தியர்களின் தலைவர் தலாய்லாமாவும் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்களும் மிக மிக வசதியாக முழு சுதந்திரத்தோடு அவர்களின் கலாசார, மத வழக்கங்களைப் பேணிய படி வாழ்கிறார்கள். கர்நாடகாவின் பசுமையான கூர்க், கொள்ளேகால் போன்ற வனப்பு மிகுந்த இடங்களில் இவர்கள் வாழ்கிறார்கள், ஐந்தாயிரம் பேருக்கு 3,500 ஏக்கர் விவசாய நிலம் இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது . சுய முன்னேற்றம், பொருளாதார உற்பத்தி, உணவுத்தேவை என்பனவற்றை தாங்களே நிவர்த்தி செய்து கொள்ளும் மிக உயர்ந்த நிலையில் திபெத்திய அகதிகள் இருக்கும் போது தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளோ பொதுக் கழிப்பிடங்களில் வாழ்வது போல கேவலமான ஒரு வாழவை வாழ்கிறார்கள். வாரத்திற்கு இரண்டுநாள் வேலை, மூன்று கிலோ அரிசி, எழுபத்தைந்து ரூபாய் என்பது அரசு இவர்களுக்கு வழங்குகிற உதவித் தொகை.

நாம் கோருவது ...

@ அரசியல் தீர்வு ஏற்பட்டு மக்கள் அச்சமற்று வாழும் சூழல் ஏற்படும் வரை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது.
@ போலீசாரும் க்யூ பிரிவி போலீசாரும் அகதிகளை அச்சுறுத்தி ஒப்புதல் பெறும் சூழல் ஒழிக்கப்பட வேண்டும்.
@ மனித உரிமை ஆர்வலகளைக் கொண்ட ஒரு குழ்வை உருவாக்கி அவர்களின் தாயகத்தில் உள்ள சூழலை அவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் எடுத்துச் சொல்லி அவர்களின் விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.
@ முகாம்களில் உள்ளவர்கள் உழைப்பு உத்திரவாதத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@ குழந்தைகளின் கல்வி ஏனைய குடிமக்களுக்கு கிடைப்பது போல தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@ அதிகதிப் பெண்களின் சுயமரியாதையும் உழைப்பும் சுதந்திரமும் பேணப்பட வேண்டும்.
@பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கே அகதிகளாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி குடியுரிமை கொடுக்க முன்வர வேண்டும்.
இவைகளை விட்டு விட்டு எப்படியாவது அவர்கள் சென்றால் சரி என்ற நினைப்பில் மத்திய மாநில அரசுகள் நடந்து கொள்வார்கள் என்றால் தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.